|
||||||||
ஆலயம் தொழுவது சாலவும் நன்று |
||||||||
இந்த உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை தன முயற்சியால் வெற்றி கொள்பவர்கள் சிலர். முயற்சி செய்தும் அதில் வெற்றி பெற இயலாமல் தோல்வி அடைபவர்கள் சிலர். இன்னும் சிலரோ தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைக் கண்டு என்ன செய்வதென்றே புரியாமல் தவிப்பார்கள். இவர்களில் முயற்சியில் தோல்வி அடைபவர்களுக்கும், பிரச்சினையால் வருத்தப் படுபவர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். இவர்களுக்காக சொல்லப்பட்டது தான் "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற பழமொழி. மனிதராக பிறந்த அனைவரும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று".
பொதுவாக தமிழில் "ஆலயம்" என்றால் "கோயில்" என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது சரியான பொருள் அல்ல. ஆலயம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு "இடம்" என்று பொருள். "சிவபெருமான்" இருக்கும் இடம் "சிவாலயம்" அல்லது எந்த இடத்தில் சிவபெருமான் முதன்மையானவராக இருக்கிறாரோ அந்த இடம் "சிவாலயம்" ஆகும். எந்த இடத்தில் கல்வி (வித்யா) முதன்மையானதாக இருக்கிறதோ அந்த இடம் "வித்யாலயம்" ஆகும். சமஸ்கிருதத்தில் "இம்" என்றால் தமிழில் "பனி" என்று பொருள். எனவே "இம்" (பனி) இருக்கும் இடம் "இமாலயம்" எனப்படுகிறது. இந்த சொற்களினால் ஆலயம் என்றால் இடம் என்று நன்றாகப் புரிகிறது. அந்த இடம் (ஆலயம்) உங்கள் வீட்டின் பூஜை அறையாகக் கூட இருக்கலாம். எனவே இறைவன் வாழும் இடமான கோயிலிலோ அல்லது வீட்டிலோ தினமும் இறைவனை வழிபடுங்கள்.
நாள் தோறும் காலையில் குளித்து முடித்த பின் உங்கள் வீட்டு பூஜை அறையில் அல்லது கடவுள் படத்துக்கு முன் நின்று கண்மூடி மனதால் உங்கள் தாய், தந்தை, குரு மற்றும் குல தெய்வங்களை வணங்குங்கள். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். இந்த நாள் உங்களுக்கு வெற்றி தரும் நாளாக அமைய இவர்களை பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களுடைய கருணை மற்றும் ஆசீர்வாதம் உங்களுக்கு ஊக்கமும் உங்கள் செயல்களுக்கு வெற்றியும் தருவதாக அமைய வேண்டும் என்று துதியுங்கள். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அவசர உலகில் நமக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை என்கிறீர்களா? உங்களால் ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்தில் ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாதா? முடியும்.
"மாதா, பிதா, குரு, தெய்வம்". யார் ஒருவர் பெற்ற தாயையும், தந்தையையும், கல்வியைக் கற்றுத் தந்த, தொழிலைக் கற்றுக் கொடுத்த குருவையும், குல தெய்வத்தையும் நாள் தோறும் வணங்குகிறார்களோ அவர்கள் வாழ்வில் சிறப்படைவார்கள்.
"குரு" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இருளை நீக்குபவர் என்று பொருள். இதை "அறியாமை", இல்லாமை", மற்றும் "புரியாமை" போன்ற இருட்டை நீக்குபவரே குரு என்று பொருள் கொள்ளலாம். தங்கள் வாழ்க்கையில் இருள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நவகிரக குரு அல்லது குருவின் அதி தேவதையான தட்சிணாமூர்த்தி ஆகியோரை வழிபடுங்கள். தினமும் கோயிலுக்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் தட்சிணாமூர்த்தியின் படத்தை வீட்டில் வைத்து வணங்குங்கள்.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதற்கு மறைமுகமான பொருள் தினமும் வழிபடுவதற்கு ஒரு முதன்மையான இடமான இறைவன் வாழும் ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதே ஆகும். எனவே தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுவது "ஆலயம் தொழுவது" அல்லது வீட்டிலாவது தினமும் வழிபடுவது "சாலவும் நன்று".
இறைவன் உறையும் இடமான ஆலயம் தொழுவோம், நலம் பல பெறுவோம். - ஜோதிடர் பலராமன். |
||||||||
by Swathi on 20 Jan 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|