இடம்: கன்னி மாடம், நிலா முற்றம். காலம்: யாமம் [மனோன்மணி உலாவ; வாணி நிற்க; செவிலி படுத்துறங்க]
(நேரிசை ஆசிரியப்பா) செவிலி: (படுத்தபடியே) ஏதம்மா! நள்ளிரா எழுந்து லாவினை? தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம் மனோ: உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வௌியே இருப்பல் போர்த்துநீ தூங்கு [செவிலி தூங்க] வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ? வாணி: எனக்கது பழக்கம் மனோ: வருதி இப்புறம். இருஇரு.. [இருவரும் நிலாமுற்றத்திருக்க] இதுவரை எங்கிருந் தனவில் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டை கேள் கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ! வாணி: நடுநிசி அம்மா! மனோ: இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன் ஊரிலென் இன்றிவ் உற்சவ அரவம்? வாணி: (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? மனோ: கண்டதோ நகருங் காணாக் கனவு? வாணி: கண்டது கனவோ தாயே? மனோ: கண்டது... கனவெனிற் கனவு மன்று; மற்று நனவெனில் நனவு மன்று. வாணி: நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! மனோ: கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! வாணி: எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! மனோ: எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! வாணி: புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? மனோ: இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மொன்றியான் இயம்ப! நீயுஞ் சித்திரரேகை யலையே. விடுவிடு! பண்ணியல் வாணீ! வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநாளாயின! வாணி: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார் மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிர் செப்பொரு சரிதம் [வாணி வீணை மீட்ட] அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! [வாணி பாட] சிவகாமி சரிதம்
(குறள்வெண் செந்துறை)
வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவா! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்கழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே.
சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந் தன்மையென நான்நடக்கத் தான்வளரும் அடவி, ஆரிருள் இனி நடக்க ஆவதில்லை உடலம் ஆறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்."
என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்; "ஏகாந்தப் பெருங்ககனம்; இதுலுவக ரணையார்; சென்றுறைய மடமுமிலை; திகழ்வௌியென் வீடு; சிந்தையற நொந்தவர்க்குச் சேவிலை பந்தம்.
அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார் உறங்க அவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார் உண்ணவெனில் பாலமிழ்தும் ஒன்றாக மதியார்.
ஆதலின் பாலுறுவ தியாதெனினு மைந்த! அன்புடன் நீ யென்பிறகே யணையிலஃ துனதாம். வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும் விடியும். உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்ீ.
என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர, ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான்.
இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள் அரியரக சியந்தமக்குள் ளறைந்து நகை புரிய;
என்புருகப் பிணைந்த அன்றில் இணைசிறிது பிரிய ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ, அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள் அலர்மலர்க்கண் நீரருவி அகமுடைந்து தூவ;
விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல் விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட; இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும் இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட
பொறியரவின் கடிகையுறு பொன்மணியி னொளியும் பொலிமதத்தின் கறையடியின் புலைமருப்பி னொளியும் அறிவரிய சினஉழுவை அழல்விழியி னொளியும், அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே
பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல் பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன், அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும் அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான்.
ஒருங்கார நிறைமுளரி உழையொதுக்கி நுழைந்தும், உயர்மலையின் குகைகுதித்தும் ஓங்கார ஒலியே தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார் சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே
நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண் நிறுவதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும் மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி,
நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன் நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார் ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பஇவை உரைக்கும்;
இனி நடக்க வழியுமில்லை; இனித்துயரு மில்லை. இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே.
தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல் சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார். என்னேயிம் மனிதர்மதி!" என நகைத்து முனிவன் இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான்.
இருந்தமுனி "வருந்தினவ! ஏதுனது கூச்சம்? இருவருமே யொருவரெனி லெவர் பெரியர் சிறியர்? திருந்தஅன லருகினிச் செறிந்துறைதி மைந்த! சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே"
எனஇரங்கி இரண்டுமுறை இயம்பியுந்தன் னருகே யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த மகன்மலைவு தௌிந்துவௌி வரும்வகைகள் பகர்ந்தான்.
பகர்ந்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில்; பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத் திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச் சிந்தைதனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான்.
செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி திகைக்கஎலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே.
மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும்; "எழிலாரு மிளமையினில் இடையூறா திகவால் இல்லமகன் றிவ்வுருவமெடுத்திவண்வந் தனையோ?
ஏதுனது கவலை? உளத் திருப்பதெனக் கோதாய் இழந்தனையோ அரும்பொருளை? இழந்தனரோ நண்பர் காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க் கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய்
ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும் அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய் கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே.
நண்பரு வினர்கள்நமை நாடியுற வாடல் நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென எண்ணாய்! பெண்களகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே! பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்!"
எரியுமுளம் நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும் வௌிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான்.
இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி இருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி விசைத்தியங்கு மெரியெழும்பி மீண்டுமவன் நோக்க வேஷரக சியங்களெல்லாம் வெட்டவௌி யான,
நின்மலவி பூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும் உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும் உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும்.
கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும் வீசுலையின் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும்
இவ்விதந்தன் மெய்விளங்க இருந்தமக ளெழுந்தே யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்; தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே!
மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை. எண்ணரிய குணமுடையள், இவள்வயிற்றி லுதித்தோர் இருமகளி ரொருபுருட ரென்னஅவர் மூவர்
ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார், ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்; செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர்
உடல்பிரியா நிழல்போல ஓதியஅப் புதல்வர் உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன். அடல்பெரியர் அருளுவர் அலகில்வடி வுடையர். அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்"
உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி ஊறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க எரிக்கவிற் கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான் இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள் முன் தொடுத்தே.
"மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம் மடமகளென் றெனக்களித்தான். மயங்கியதின் மகிழ்ந்து தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும் தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன்.
குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன். குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன். வெறுப்பாக நினைத்தேன்மேல் வேதனைப்பட் டவரும் வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே.
பொருள் விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பி வந்தோர் பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை அருளரும்பி யெனைவிரும்பி ஆளுமென ததிபர் அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன்.
ஒருவாரம் ஒருமாதம் ஒருவருட காலம் ஓயாமல் உன்னியழிந் தேன்உருவங் காணேன். திருவாருஞ் சேடியர்க்குச் செப்ப அவர் சேரும் 0 திசைதேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்.
ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார். அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்; திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன.
கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க? உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால் உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையும் காணேன்.
உண்டெனிலோ கண்டிடுவன்; இல்லையெனில் ஒல்லை, உயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி கண்துயிலும் இல்லிடந்தீ கதுவவௌி யோடும் கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன்.
தீர்த்தகுலம் மூர்த்தி தலம் பார்த்துடலம் சலித்தேன். திருக்கறுபற் குருக்கள்மடம் திரிந்து மனம் அலுத்தேன் வார்த்தை கத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய மறுத்து றங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே.
மான்மறவாக் கலையினமே! வாழ்பிடிவிட் டகலா மதம்பெருகு மாகுலமே! வன்பிகமே! சுகமே! நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரரோ? நவில்வெரென பிந்தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன்.
இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஓடி இதுவரையும் தேடியுமென் அதிபரைக்கண் டிலனே. எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண? இக்காயம் இனியெனக்கு மிக்கஅரு வருப்பே.
ஐயோவென் உள்ள நிலை அறியாரோ இனியும்? ஆசைகொண்டு நானைலைந்த தத்தனையும் பொய்யோ? பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதே?
நல்லர்அரு ளுடையரென நம்பி இதுவரையும் நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ? இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும் எந்நலமும் கொல்லவென எடுத்தசுடுகாடே
என்னுடைய உயிர்த் துணைவர் எண்ணரிய அருளில் ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால் வகுத்தாறி னேன்சிறிது, மறுசாட்சி யில்லை.
இனியிருந்து பெறும்பயனென்? இவ்வழலே கதி" யென்று எரியுமழல் எதிரேநின் றிசைத்தமொழி முழுதும் முனிசெவியிர் புகுமுனமே மூதுருவம் விளக்கி முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி.
'சிவகாமி யானினது சிதம்பரனே' என்னச் செப்புமுளம் இருவருமற் றோருருவம் ஆனார்! எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம். இருவருமொன்றாயினரென் றேயறையும் சுருதி.
பரிந்துவந்து பார்வதியும் கஞ்சப் பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த அருந்ததியும் அம்ம! இஃது அருங்கதியென் றஞ்ச ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த
ஆழியுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவௌம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க!
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) மனோன்: வாணி! மங்காய்! பாடிய பாட்டும் வீணையின் இசையும் விளங்குநின் குரலும் தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும் ஆ! ஆ! [இருவரும் மௌனமாய் இருக்க] உனதுகா தலனெங் குளனோ? உணர்வைகொல்? வாணி: எனது சிந்தையில் இருந்தனர்; மானார். மனோன்: ஆயினும் வௌியில்? வாணி: அறியேன் அம்ம! மனோன்: போயின இடம்நீ அறியாய்? வாணி: நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென ஓதினன் ஓர்கால் மனோன்: ஓகோ! ஓகோ! [மௌனம்] கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் வாணி: அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல் ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி இருவரும் மௌனமாய் நெடும்பொழுதிருந்தோம் கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர் வருவதிங் கறியா மதியிலி அதனைக் கண்ணினை ஒற்றிலன்; உள்மனம் உகந்திலன்; மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்; ஆர்வமும் அன்பும் அறியார் மான் ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய உன்னும் முன்னரென் அன்னையங்கடைந்தாள்; தீமொழி பலவும் செப்பினள். யானோ? நாவெழல் இன்றி நின்றேன். நண்பர் மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர். அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ! கண்டிலேன் இனிமேற் காண்பனோ? அறியேன் ஒருமுறை கண்டேன் உளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே! மனோன்: உரைப்பதென் வாணீ! உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ நினைத்தாய்? வாணி: ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். மனோன்: ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே! பூதப் பொருட்கே புலன்துணை அன்றி போதப் பொருட்குப் போதும் போதம் இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? கருவிநுண் மையைப்போற்காட்சியும் விளங்கும் பட்டே உணரும் முட்டா ளர்கள்போல தொட்டே உணரும் துவக்கிந் திரியம், நுண்ணிய கருவியாம் கண்ணோ உணரும் எண்ணறச் சேய்த்தோம் நுண்ணிய ஒளியை! கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும் உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும் எத்தனை பெட்டியுள் வைத்து நாம் பூட்டினும் வானுள மின்னொளி 'வடக்கு நோக்கி'யைத் தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை! போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பை பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! வாணி: கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; நம்பலாம் தகைத்தே! மனோன்: நம்புவ தன்றி மற்று என்செய நினைத்தாய்? இவ்விரும் பொருள்கள் தருக்கவா தத்தால் தாபித் திடுவார் கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் தரும்பக் குவமிலார் தமதுளம் போய் வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யெனயான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன் வாணீ! ஐயோ! நம்பெலென் பதுவே அன்பின் நிலைமை தௌிந்தவை கொண்டு தௌிதற் கரியவை உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம் எனத்திரி வாதியர் அன்பொரு போதுமே அறியார் தாய்முலைப் பாலுள்நஞ்சு ஆய்பவ ரவரே! முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ! [உடல் புளகாங்கிதமாய் நடுங்க] ஏதோ வாணி! இப்படி என்னுடல்? ... வாணி: சீதமோ? தாயே! மனோன்: சீ! சீ! இன்றெலாம் இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்! வாணி: இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றினி தாயே பாராய்! அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். மனோன்: நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல்? [எழுந்து மேகம் பார்க்க] வாணி: (தனதுள்) ஐயோ! ஏன் நான் அத்திசை காட்டினேன்? போயெப் படியான் புகல்வன்! மனோன்: வாணீ! ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அரைகுதி போர்க்குறி போலும், புகலுதி உண்மை [மழை இரைந்து பெய்ய] அஞ்சலை அஞ்சலை இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு வாணி: இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன்... விளம்புவன் வீட்டுள் வருக! தௌிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே! [இருவரும் போக]
|