சிலர் சாதி ஒழிப்பு பற்றி ஆரவாரமாகப்பேசுவார்கள் . ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்கமாட்டார்கள் . ‘ சாதிகளை ஒழிப்போம் , சாதிகளை ஒழிப்போம் ’ என்ற ஒரு அரசியல் தலைவர் ஆரவாரமாகப்பேசினார் . அப்போது ஒரு தொண்டர் அவர் காதருகே சென்று “ நம்ம சாதியையுமா ? ” என்று கேட்டார் . உடனே தலைவர் சுதாரித்துக் கொண்டு நம்ம சாதியைத்தவிர மற்ற சாதிகளை ஒழிப்போம் என்று பேசத் தொடங்கினார் .
வேளாளர் சங்க கல்யாண மண்டபத்தில் ராமமூர்த்தி முதலியார் அரங்கில் , நாச்சியப்ப கவுண்டர்தலைமையில் , சுப்புநாயக்கர் முன்னிலையில் கருப்பசாமி நாடார் அனுசரணையில் நடக்கிறது சாதி ஒழிப்பு மாநாடு . இந்தப் போலித்தனங்களுக்கு ஆட்படாமல் அமைதிப் புரட்சி செய்தார் பெருந்தலைவர் .
பெருந்தலைவர் அமைத்த மந்திரி சபையில் எம் . பக்தவச்சலம் , சி . சுப்பிரமணியம் , ஏ . ப . ஷெட்டி , எம் . ஏ . மாணிக்க வேலு நாயக்கர் , ராமநாதபுரம் ராஜா , ராமசாமிப் படையாச்சி , பரமேஷ்வரன் ஆகியோர் இடம் பெற்றனர் .
மந்திரிகளுக்கு இலாகாக்களை அளித்ததிலும் பெருந்தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி செய்தார் . அரிசன மந்திரியான பரமேஷ்வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார் . மதுவிலக்கு இலாக்காவும் அவருக்கு அளிக்கப்பட்டது . வேண்டும் என்றே பெருந்தலைவர் செய்தாரா என்றெல்லாம் கூட அப்போது பேசப்பட்டது . ஆனால் அவர் இப்படிச் செய்ததன் குறிக்கோள் இலக்குத் தவறவில்லை . அறநிலையத்துறை மந்திரியாகப் பரமேஷ்வரனை ஆக்கியதன் மூலம் , தமிழ் நாட்டிலுள்ள கோவில் தர்மகர்த்தாக்கள் ஒரு அரிசனுக்கு மதிப்பையும் மரியாதையும் அளிக்கும் நிலையைக் காமராசர் உருவாக்கினார் .
இப்படிச்செய்ததால் அரிசன மக்களுக்கு பெருந்தலைவர் ஒரு விடிவெள்ளியாகக் காட்சியளித்தார் . புதிய சமுதாயத்தில் தங்கள் சமூகம் பெருந்தலைவர் மூலம் பெருமை பெற்றுவிட்டதாக அவர்கள் எண்ணி மனம் மகிழ்ந்தனர் .