கடந்த தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கத்தி திரைப்படம் தமிழில் வெளியான அடுத்த சில வாரங்களிலேயே தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், படத்தை நேரடியாக தெலுங்கில் ரீமேக் செய்ய சில நடிகர்கள் விருப்பப்பட்டதாகவும், பின்னர் படத்தைப் பார்த்த அவர்கள் தங்களுக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்று நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதையடுத்து கத்தி படம் டப்பிங் ஆகிதான் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், படத்தின் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் தெலுங்கு டப்பிங்கை அடுத்த வாரம் வெளியிடப் போவதாக தயாரிப்பு வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே அடுத்த வாரம் ஆம்பள, அனேகன் ஆகிய படங்களும், தெலுங்கில் டப்பிங் வெளியீடாக வெளியிட உள்ளார்களாம். ஆம்பள படம் பொங்கலுக்கு தமிழில் வெளிவந்தது. தெலுங்கில் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் அந்தப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துவிட்டனர்.
அனேகன் படம் கடந்த வாரம் தமிழில் வெளியானது. இந்தப் படத்தை தெலுங்கில் இன்று வெளியிடுவதாக இருந்தார்கள், பின்னர் இந்தப் படமும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆக, அடுத்த வாரம் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் தெலுங்கில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|